பல்வேறு நோய்களை தடுக்க உதவும் பேரீச்சம் பழம் (மருத்துவ கட்டுரை)
அவசியம் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை
என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும்
சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக
இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.
எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது
பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.
அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக்
கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது.
குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல்
பேரீச்சைக்கு உண்டு.
பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும்
பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில்
உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு
எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான
அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும்,
சருமத்திற்கும் அவசியமானது.
சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா
கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும்
பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை,
மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும்
புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.
பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில்
0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு
நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது
ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான
மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும்
வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த
அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம்,
இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.
